சென்னை: வழுக்கை தலையை மறைக்க விக் வைத்து ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனைவி போலீசில் புகாரில் அளித்துள்ளார்.
இளம்பெண் ஒருவருக்கும் சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு மேட்ரிமோனி மூலம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக 50 சவரன் நகை, ரூ.2 லட்சத்தை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.
ராஜசேகர் தலையில் முடி இல்லாததால் அவர் விக் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் அவரது மனைவிக்கு தெரியாது என்று சொல்லப்படுகிறது.
திருமணத்திற்கு பின் ராஜசேகரன் தன் மனைவியுடன் சந்தோஷமாக இருப்பதில் ஈடுபாடு காட்டவில்லை. ஒரு கட்டத்தில் மனைவியின் வற்புறுத்தலால் ராஜசேகர் அவருடன் சந்தோஷமாக இருக்க முயன்றார். ராஜசேகரின் விக் திடீரென கழன்று விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவி, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலையில் முடி போல் விக் வைத்து மேட்ரிமோனியில் புகைப்படம் பதிவிட்டு, ராஜசேகர் ஏமாற்றியதாக அவர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
50 சவரன் நகைகள் பற்றி கேட்டபோது கணவர் ராஜசேகர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார். இதனால், புகாரின் அடிப்படையில் போலீசார் 498(ஏ)- கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகள், 406- நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ் ராஜசேகர், தாயார், ஜெகதா, தந்தை ஜெகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
